Custom Search

Friday, April 06, 2007

எனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II

போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன்.சுமதிரூபனின் (சுமதி ரூபன் தான் நம்ம கறுப்பி :-))இயக்கத்தில் மேடையேறப்போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.வழமையான தமிழ்நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ).அணங்கு அடையாளம் 1 தோற்றமயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார்.ஒளி சத்தியசீலன்.ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி.மேடை உதவி ஈஸ்வரி.

நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அறிவிப்பாளர் ராதிகா சுதாகர் வாசித்தாரர். பக்கத்திலிருந்த சில இளையவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் முன்னாலிருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி சத்தம்போடாமல் இருக்கச்சொல்ல இளையவர்களும் பேப்பரில இருக்கிறதைத்தானே அவா வாசிக்கிறா என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து கதைத்து முடித்தார்கள்.

முதலாவது நாடகமான அணங்கு ஆரம்பமானது.பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து குழந்தைகள் ஆரவாரப்படும் சத்தம்.உடனே சிலர் அமைதியாகவிருங்கள் நாங்கள் மியுசியத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம்...சத்தம்போட்டுக் கதைக்கக்கூடாதென்றார்கள்.மியுசியத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ணகி சிலை சீதையின் சிலை மணிமேகலையின் சிலை போன்றன இருந்தன.அந்தச்சிலைகளைப் பற்றிக்கேட்ட குழந்தைகளுக்கு அழகாக ஆங்கிலத்தில் அவர்கள் மூவரைப்பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.கண்ணகியை அறிமுகப்படுத்தும்போது சிறீலங்காவில் சிங்களவர்கள் "பத்தினித்தெய்வ" என்று வழிபடுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது.

அடுத்த காட்சியில் இக்காலப்பெண்ணான சத்யா தன் கணவரான கோபியுடன் மனஸ்தாபப்பட்டு "கோபி என்னை விட்டுப்போகாதயுங்கோ" என்று கெஞ்சுவா பிறகு தனிமையில் என்ர பிரச்சனைகளிலிருந்து வெளியேற என்ன வழி என்று யோசனை செய்து கொண்டிருக்கும்போதே வேறொரு உலகமான கண்ணகி சீதை மணிமேகலை மூவரும் வசிக்கும் இடத்துக்கு வந்துவிடுவார்.

அங்கே கற்பில் சிறந்தது தான்தான் அதனால் தான் தன்னைப் பத்தினித்தெய்வமாக வழிபடுகிறார்கள் என வாதாடுவார் கண்ணகி சீதையோ நான்தான் பாக்கியம் செய்தவள் உலகமே ஏகபத்தினிவிரதன் என்று போற்றும் இராமனைக் கணவனாக அடைந்தவள் என்று கூறுவார்.அதற்கு இக்காலப் பெண்ணான சத்யா இந்தக்காலத்தில எல்லா ஆண்களுமே இராவணன்தான் என்பார்."அப்பவும் என்ர மாமி சொன்னவா கணவனைச் சீலைத்தலைப்பில முடிஞ்சு வைக்கவேணும் என்று நான்தான் தப்பு பண்ணிட்டன் அதான் அவர் அவளிட்ட போயிட்டார் என்று கண்கலங்குவா" சத்யா.அதற்கு கண்ணகி எதற்கும் கவலைப்படாதே நீ போய் உன் கணவரோடு சந்தோசமாக வாழத்தொடங்கு என்று சொல்ல சீதையும் சேர்ந்துகொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பாய் என்று கூறுவார்.உடனே மணிமேகலையோ பற்றுக்களைத் துறந்துவிடு அதுதான் உண்மையான சந்தோசமான வாழ்க்கைக்கு அத்திவாரம் என்பார்.

சத்தியா மீண்டும் தன் கணவரின் சந்தேக புத்தியைச் சொல்லி அழ ஆரம்பிப்பா.நாங்கள் வாடகைக்கு இருக்கிற வீட்டுக்காரர் ஒருமுறை பேஸ்மன்றுக்கு ஏதோ திருத்தவென்று வந்தவர் தவறுதலாய் சிகரெட் பிடிச்சுப்போட்டு அடிக்கட்டையை கீழே போட்டிட்டு போட்;டார் அதுக்குக் கோபி யாரோட படுத்தனீ என்று என்னை அடிக்கிறார் என்று அழுவா.உடனே மணிமேகலை சத்யாவைத் துறவுபூணும்படி அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கு கண்ணகியும் சீதையும் சேர்ந்;து "நீ பரத்தவள் குலத்தில் வந்தவள் குலமகள் அல்ல" என்று உரக்கச் சொல்வார்கள்.மணிமேகலை அமைதியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேறொரு பெண்ணை நாடிச் சென்ற உன் கணவருக்காக காத்திருந்து அவன் மீண்டும் வரும்போதெல்லாம் உன் சொத்துக்களை வாரி வழங்கி பின்னர் அவனை ஏற்றுக்கொண்டவள் நீ.உன் கணவருக்குப் பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கும்போது நீதிதவறியதற்காக ஒரு மாநகரையே எரித்த சுயநலக்காரியான நீ குற்றமற்றவளா? நீ கற்புக்கரசியா?என்று கேக்க கண்ணகி கூனிக்குறுகி தன் தவறை ஒப்புக்கொண்டு தனக்கான தண்டனை என்ன என்று கேட்பார்.அதற்கு மணிமேகலை உனக்கான கோயில்கள் இடிக்கப்பட வேண்டும்.பட்டிமன்றங்களிலிருந்தும் சரித்திரங்களிலிருந்தும் உன் பெயர் நீக்கப்பட வேண்டும்.நீ பெண்களுக்கான சரியான வழிகாட்டியல்ல என்று தீர்ப்புவழங்குவார்.

அடுத்ததாக சீதையும் தன் கதையின் மறுபக்கத்தைச் சொல்வார்.சூரியன் வானத்திலிருக்கும்போது சூரியனும் சந்திரன் இருக்கும்போது சந்திரனும் நான் கற்புள்ளவள் என்பதற்கு சாட்டிசிக்காரர்கள்.அவர்கள் இருவரும் இல்லாதபோது அக்னி பகவான்தான் என் கற்புக்குச் சாட்சி. தன் தம்பியான லக்ஸ்மணணின் படுக்கையில் கிடந்ப வளையல்களைப் பார்த்துக் கூடப்பிறந்த தம்பியையும் என்னையும் சந்தேகப்பட்டவர்தான் இராமர் என்று ஒப்புக்கொள்வார்.இராமரின் பெயரால் நடக்கும் உயிர்ச்சேதங்கள் நிறுத்தப்படவேண்டும் இராமர் கோயில்களும் உடைக்கப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படும்.

கிட்டத்தட்ட இதே பார்வையில் தமிழ்நதியும் காவியப்பெண்களைக் கேள்விப் படுத்தியிருந்தது உங்களுக்கு ஞாபகம் வருகிறது.



இவற்றையெல்லாம் கேட்டபிறகு சத்யா தன் பிரச்சனைக்குப் பொறுமை விவாகரத்து மறுமணம் தற்கொலை இவையெல்லாம் முடிவாகாது என்ற முடிவுக்குவந்து துறவுதான் சிறந்த வழி எனத் தீர்மானித்துக் கண்ணகி சீதை இருவரையும் அழைத்துக்கொண்டு மணிமேகலையிடம் போய்ச் சேர்ந்து தியானத்தில் ஈடுபடுவார்கள்.அப்பொழுது மணிமேகலையின் தியானத்தில் உதயகுமாரன் தோன்றுவார்.தியானத்திலே மணிமேகலைக்கும் உதயகுமாரனுக்குமான இடையில் இடம்பெறும் உடலுறவு மிக அழகான நடன அசைவுகளால் சித்தரிக்கப்பட்டதுதான் இந்த நாடகத்தின் சிறப்பே."காமகோள" சுதர்சன் துரையப்பாவின் உதிவியோடு இந்த நடனத்தை அமைத்தவரும் மணிமேகலையாகப் பாத்திரமேற்ற தர்சினி வரப்பிரகாசம் தான்.அணங்கு நாடகத்தில் மிகச்சிறப்பான வேடம் தர்சினிக்குத்தான் வாய்த்திருக்கிறது.


உண்iமாயாகவே மணிமேகலை இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றும் சாந்தமான முகவமைப்பு தர்சினியினுடையது.இக்காலப்பெண்ணாக நடித்த சத்யா தில்லைநாதன் கண்ணகியாக யசோதா கந்தையா சீதையாக பவானி சத்யசீலன் உதயகுமாரனாக றெஜி இமானுவல்பிள்ளை ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்கள்.

அடுத்ததாக அடையாளம் 1 என்ற ஒரு வித்தியாசமான நாடகம் இடம்பெற்றது.2300 வருடங்களுக்கு முதல் கிரீக் நாட்டுக் கவிஞரான நுரசipனைநள என்பவரால் ஆநனநய என்ற நாடகத்தின் பாதிப்பாக கனடாவில் அதிகமாக நிகழும் மனவுளைச்சலால் பாதிக்கபட்ட ஈழத்துத் தமிழ்ப்பெண்களின் தற்கொலை பற்றிச் சொல்கிறது இந்த நாடகம்.

ஆண் பெண் உறவின் அடையாளத்தைக்குறிக்க மேடையின் ஒரு மூலையில் சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மொழி இனம் சாதி என்ற எந்தப்பாகுபாடுமின்றி மனிதன் என்ற இனம் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற அங்கலாய்க்கும் ஒரு பெண் தன் கதையைச் சொல்கிறாள்.ஊர் ஊராய் ஓடி இந்த உடம்பில உயிரைத்தக்க வைக்கப் பாடுபட்டு இறுதியில் திருமணம் என்றபெயரில் ஒரு சித்திரவதைக்கூடத்துக்கு அனுப்பப்படுகிறாள்.அனுபவங்கள் வெறுமையும் கொடுமையுமாகவே அமைந்துவிடுகிறது.

சில குழந்தைகள் குதூகலமாகச் சிரித்து "ஓரம்மா கடைக்குப்போனா ஒரு டசின் பென்சில் வாங்கிவந்தா அதன் நிறமென்ன" என்று விளையாடுவதைப் பார்த்ததும் தானும் சின்னவயதில் இப்படித்தானே சிரித்துச் சந்தோசமாக இருந்தேன் என்று நினைத்துப்பார்க்கிறாள் அந்தப்பெண்.அப்பொழுதுதான் அவளை முதன் முதலாகப் பெண் என அடையாளம் காட்டுகிறது சித்தப்பா என்ற உறவு."சித்தப்பா விடுங்கோ என்னை விடுங்கோ" என்று திமிறி ஓட முடியாமல் தனக்குள்ளே அழும் அந்த அழுகை" பார்வையாளர்கள் எல்லாரையும் ஒருமுறை உலுக்கியிருக்கும்.

இந்தநாடகம் சுமதி ரூபனின் தனிநடிப்பாலாமைந்தது.அவரே பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் பின்னர் அந்தப்பெண் படும் வேதனையை வெளியே இருந்து பார்க்கும் மக்களாகவும் நடித்தார்.ஆண்கள் போராடப்போனால் வீரமென்று போற்றும் அதே சமுதாயம்தான் பெண்கள் போராடப்போனால் குடும்பப்பிரச்சனைகள் போன்றவற்றையே முதன்மையாக்கிப் பேசவும் செய்கின்றது என்றும் பின்னர் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு பெண்ணின் தற்கொலைக்கான காரணத்தை எப்படி பலர் பல விதமாகத் திரித்துக் கதைப்பார்கள் எனவும் தெளிவாகத் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் சுமதி ரூபன்.

1.அந்தப்பிள்ளையை ஊரில ஆமிக்காரர் கொஞ்சநாள் பிடிச்சு வச்சிருந்தவங்களாம் அவங்கள் அந்தப்பிள்ளையை என்ன செய்தாங்களோ யாருக்குத் தெரியும்..முதல் பிள்ளை பிறந்நததில இருந்தே ஒரு மாதிரித்தான் இருந்தது பாவம் இப்பிடி அநிநாயமாச் செத்துப்போச்சு.

2.இல்லையே நான் வேற மாதிரியெல்லோ கேள்விப்பட்டனான் என்று தற்கொலைக்கு இன்னொரு காரணம் கற்பிக்கப்படும்.

பின்னர் மின்னல் விழுந்து எரிஞ்சு நான் சாகமாட்டனே.ஆற்றில குதிச்சுச் மூச்சுத்திணறிச் சாவமோ என்று தற்கொலைக்கான பல வழிகளையும் யோசித்து விட்டு "ஐயோ என் குஞ்சுகள் பாவமே" என்று அரற்றுவாள்.அப்பொழுது இன்னொரு பெண்குரல் இந்தப்பெண்ணைச் சமூகநலமையமொன்றில் உதவி பெறும்படி அறிவுறுத்தும்.அதற்கு இந்தப்பெண் அப்ப கல்யாணம் என்றது பொய்யா?? எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை எனக்கு என்ன செய்யிறதென்று தெரியும் என்பாள்.தன் குழந்தைகளை அழைத்து " அம்மா சொன்னாக் கேப்பிங்கள் தானே..அம்மா உங்களுக்கு நல்லதுதானே செய்வன்" என்று சொல்லும்போதே தன் குழந்தைகளின் முகத்தைப்பார்த்ததும் மீண்டும் சாக மனம் வராது தன் குழந்தைகளைக் கொஞ்சுவாள்.தன் மகளைப் பார்த்து அம்மா இல்லாமல் நீ வளரமாட்டாய் உன்னைச் சீரழிச்சிடுவாங்கள் என்று சொல்லும்போது மகளாக நடித்த அந்தச் சின்னப் பெண்ணின் கண்ணில் பலநூறு கேள்விகள்.சந்தோசமான உலகத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லிக் குழந்தைகளையும் தன்னோடு மரணத்துள் திணிப்பதாக முடிகிறது அடையாளம் 1. ஏற்கனமே சுமதி ரூபனின் குறும்படமொன்று சிறுமியொருவர் வீட்டில் வாடகைக்கிருக்கும் ஒரு அண்ணாவால் பாலியல் வதைக்குள்ளாவது பற்றியும் மற்றொரு குறும்படமான "மனுசி" பெண்கள் சில ஆண்களால் ஒரு இயந்திரமாகப் பார்க்கப்படுவது பற்றியும் பேசியிருந்தன.மீண்டும் அவருடைய அடையாளம் 1 என்ற இந்த நாடகம் கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் நடக்கும் பெண்கள் பிரச்சனைகள் பற்றி எடுத்தியம்புகிறது.இந்த நாடகத்தைப் பார்க்கும்போது உண்மையாகவே தன் குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களுக்கு அந்த முடிவை எடுக்க எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்..அந்த முடிவை எடுக்கு முன்னர் அவர்களுடைய மனதில் எத்தனைவிதமான போராட்டங்கள் நடந்திருக்கும் என்று கண்முன்னே காணக்கூடியதாகவிருந்தது.


தோற்றமயக்கம்

நான்கு நாடகங்களிலும் என்னை மிகவும் கவர்ந்தது தோற்றமயக்கம் தான். என்னை மட்டுமல்ல அநேகமானோரைக் கவர்ந்து என்று சொல்லலாம் காரணம் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்த சத்யா தில்லைநாதன் அபிராமி சஞ்ஜெய் பவானி சத்யசீலன் மூவரும் போட்டி போட்டிக்கொண்டு நடித்ததுதான்.இந்த நாடகம் யுஅநசiஉயn டீரககயடழ என்ற நாடகத்தின் தழுவல். நாடகம் ஆரம்பமாக முதலே கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறும் என்று சொல்லப்பட்டதால் சுமதி ரூபன் அப்படி யாரைத் திட்டப்போறா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் சீதையாக அணங்கு நாடகத்தில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பாவனி சத்யசீலன் இதில் தையல்காரியாக வெற்றிலை போட்டுக் குதப்பியபடி ஏத்திக் கட்டிய புடைவையுடன் "நாசமாப்போவான் கோதாரி விழ" என்று திட்டிக்கொண்டே வந்தா மேடையில.எனக்கு வேற 10 தரம் அண்ணா போன் பண்ணிட்டான் வெளியில வரச்சொல்லி..பேசமா எழும்பிப்போவமா என்று யோசிச்சுக்கொண்டிருக்கும்போதே தையல்காரியின் வேலைக்காரப்பெண்ணாக சத்யா வந்தார்.சத்யாவின் பரட்டைத் தலையும் வாய் சுழிப்பும் கண் பார்வையும் கழுத்தைத் திருப்பி திருப்பி ஒரு மாதிரிப் பார்ப்பதுவும் என்னை இருக்கையை விட்டு எழும்ப விடேல்ல.சத்யா எங்க இருந்துதான் இந்த நடிப்பைக் கற்றுக்கொண்டாரோ தெரியவில்லை.நடிப்புக்கா துளியும் கஸ்டப்பட்டதாக தெரியவில்லை ...இயல்பான நடிப்பு.

இந்நாடகத்தின் கதை மிகவும் சுருக்கமானது.ஒரு பணக்காரக் கிழவியின் வீட்டு அலுமாரியில் இருக்கும் சிவிப்புச்சீலையைக் களவெடுத்து விற்றுப் பணமாக்குவதுதான் தையல்காரியின் நோக்கம்.சத்யாவுக்குத்தானும் களவெடுக்கப் போகவேண்டுமென்றாசை ஆனால் சத்யா சின்னப்பெண் என்று அவருடைய முதலாளியம்மா சத்யாவைத் தன்னுடன் வரவேண்டாமென்று சொன்னதும் சத்யா மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டிருப்பா.சத்யாவைச் சிரிக்க வைப்பதற்காக முதலாளியம்மா "ரசனிக்காரன்ர படம் ஓடுதாம் பார்க்ப்போவமே" என்று கேக்க சத்யா கி கி என்றொரு சரிப்புச் சிரிப்பா அதைக் கேட்ட முழுப்பேருக்கும் சிரிப்புத்தான்.முதலாளியம்மா றேடியோவ ஒன் பண்ண முதலே திரைக்குப்பின்னாலிருந்து பாட்டு ஒலிக்கத் தொடங்கிவிட்டது. " ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடல் ஒலிக்கும்போதே சத்யா தும்புக்கட்டையை எடுத்துக்கொண்டு டான்ஸ் ஆடி ஆடி வீட்டைக் கூட்டுவா.ஏமாளிப்பெண்ணாக ஒரு குழந்தையின் குதூகலத்தோடு முதலாளியம்மாவையே சுற்றிவரும் பெண்ணாக சத்யா திறம்பட நடித்துள்ளார்.தையல்காரியின் நடிப்பும் அவர் பிரயோகிக்கும் "சிங்காரி அடி சக்கையென்டானாம்" இப்படியான வார்த்தைகளும் தலைக்;குக் குளித்துவிடடு வரும் வேலைக்காரப் பெண் சத்யாவைத் தன் பிள்ளைபோல ஓடிக்கலோன் பவுடர் எல்லாம் போட்டு விடுவது சத்யா ஒவ்வொரு நிமிசத்துக்கும் "நானும் வரட்;டே இரவைக்கு" என்று கேட்பதும் பார்வையாளர்களின் மத்தியில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டேயிருந்தது.



முதலாளியம்மாவுக்கும் வேலைக்காரப்பெண்ணுக்கும் இடையில் களவெடுக்கப்போக கூட்டுச்சேர வரும் ஊரிலுள்ள இன்னொரு பெண்ணாக அபிராமி சஞ்செய் நடித்திருந்தார்.அபிராமிக்கு இதுதான் முதல் மேடையனுபவம் என்பது நம்பமுடியவில்லை.சிறப்பாக நடித்திருந்தார்.சத்யாவை விட்டிட்டுத் தானும் தையல்காரியும் சீலையைக் களவெடுக்கப்போகலாம் என்பது அபிராமியின் ஐடியா.அதற்காகச் சத்யாவை சத்யாவின் வீட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு அன்றிரவு அபிராமியும் தையல்காரியும் களவெடுக்கப்போக ஆயத்தமாக இருப்பார்கள்.அப்பொழுது சத்யா அரக்கப் பரக்க கையில் ஒரு பார்சலுடன் ஓடி வருவா வந்து "முதலாளியம்மா களவெடுக்கப்போகவேண்டாம் அங்க நிறைய ஆக்கள் நிக்கினம்" என்று சொல்லிட்டு "முதலாளியம்மா இதில ஒரு சீலையிருக்கு இதை நானுங்களுக்கு விக்கப்போறன்" என்று சொல்லவே அபிராமி தையல்காரியை இழுத்துக்கொண்டு போய்.."பெட்டையப் பார்த்திங்கிளே ஆருக்குக் கதை விடுறாள் கச்சிதமாக் காரியத்தை முடிச்சிட்டு வந்து இப்ப எங்களை ஏமாத்தப் பார்க்கிறாள்..கையில பார்சலைப் பார்த்திங்கிளோ அவள் அங்க போய்ச் சிவப்புச்சீலையை எடுத்திட்டாள்" என்று தையல்காரியிட்டச் சொல்லவும் அவாவும் அதை நம்பி ஆத்திரத்தில சத்யாவைத் திட்டிப்போட்டு பக்கத்தில கிடந்த அயன்பொக்ஸ் ஐ எடுத்துச் சத்யான்ர காதருகில சுட்டுப்போடுவா.சத்யாவும் "ஏன் என்னைப் பேசுறீங்கள் ஏன் என்னைப் பேசுறீங்கள்" என்று பிதற்றிக்கொண்டு மயங்கிடுவா.அபிராமி பார்சலைப் பிரிச்சுப் பார்த்தால் அதில சிவப்புப் புடைவை இல்லை மாறாக வேறொரு புடைவைதானிருக்கும்.தையல்காரி சத்யா பேச்சு மூச்சில்லாமக் கிடக்கிறதப் பார்த்திட்டு "என்ர ராசாத்தி எழும்படி ஐயோ நான் என்ன செய்வன்" என்ற கதறுவா.."ஆராவது வாங்கோவன் என்ர செல்லத்தைக் காப்பாத்துங்கோ" என்று கத்துவா அபிராமி அந்த இடத்தை விட்டு ஓடிடுவா.


அடையாளம் 2

நடிப்பைப் பார்க்கும்போது தோற்றமயக்கம் என்னைக் கவர்ந்தது போல் கதை வரிசையில் என்னைக் கவர்ந்தது அடையாளம் இரண்டு என்ற குறுநாடகம்தான்.பெண்களை அடிமையாக வைத்திருத்தல் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கும் என்று சொல்கிறது.தாயான சுமதி ரூபனுக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும்.சின்ன வயதிலிருந்தே மகனை வைத்து பெண்களை அடிமையாக வளர்க்கிறார் தாயார்.மகன் பெண்கள் நால்வரையும் கயிறு கட்டி மேய்ப்பார்.பெண்கள் வளர்ந்ததும் நால்வருக்கும் திருமணம் நடக்கிறது.அம்மாவுக்கும் வயசாகிக்கொண்டே போகிறது.நான்காவது பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது.அம்மாக்கு மிகவும் வயசாகிவிட்டது.மகனுக்குத் திருமணம் ஆனதாகக் காட்டுப்படவில்லை.இறுதியில் "பெட்டையள் ஒருதரும் திருமணத்துக்குப்பிறகு இந்தப்பக்கம் திரும்பியும் பார்க்கேல்ல எனக்கும் வயசாகிட்டு என்னையும் நீதாண்டா பராமரிக்கணும்" என்று தாயார் சொல்லும்போதே மகன் தரையில் சுரண்டு விழுந்துவிடுவான்.ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போதும் அவர்களை முன்னர் கட்டியிருந்த கயிற்றை அண்ணனுக்கு மேலே சுற்றிவிட்டுச் செல்வார்கள்.நான் நினைக்கிறேன் ஆண்களுக்கு பெற்றோராலும் சகோதரிகளாலும் ஏற்றப்படும் சுமையை அந்தக் கயிறு சித்திரிக்கிறதென்று.

நான்கு நாடகங்களும் முடிந்த பின்னர் கேள்விகள் கேட்பதற்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நேரம் ஒதுக்ப்பட்டது.அடையாளம் 1ல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்வது போல காட்டியது ஆண் கொடுமைப்படுத்தியதாலா அல்லது மனவுளைச்சலால என்று ஒருவர் கேட்டார் அதற்கு இயக்குனர் சுமதி ரூபன் அது கனடாவில் நடந்த ஒரு உண்மைக்கதையைத்தான் நாடகத்தில் அப்படியே காட்டியுள்ளேன் என்றார்.அதே நாடகத்தில் பெண்கள் போராடப்போவது பற்றிய அவரது கருத்துப் பற்றி நான் கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் எனக்கு ஆச்சரியமாகவிருந்தது ஆனால் அது உண்மையெனப் பின்னர் அறிந்துகொண்டேன்.ஈழப்போராட்டத்திலிருந்து விலகிய பெண்களின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அப்பெண்களின் சகோதரிகளுக்குத் திருமண ரீதியாக வரும் பிரச்சனைகள் பற்றியும் அறியக்கூடியதாகவிருந்தது.

அணங்கு நாடகத்தில் இறுதியில் மணிமேகலை உதயகுமாரனுடன் தியானத்தில் ஒன்றுசெருவது போலக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பெண்களின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறாரா என ஒருவர் கேட்டார் அதற்குப் பார்வையாரளர் பகுதியிலிருந்து " அதைப் பலவீனம் என்று சொல்லாமல் பெண்களுக்கும் உணரச்சிகள் இருக்கென்றும் எடுத்துக்கொள்ளலாம் என்று" ஒரு பதில் வந்தது. தொடர்ந்தும் நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தில் கலந்துகொள்ளமுடியாமல் போயிற்று.இப்படியான நாடக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற சுமதி ரூபனின் ஆதங்கத்தை இனிவரும் நிகழ்வுகளில் ஆண்கள் தீர்த்து வைப்பீர்கள் தானே:-)

19 comments:

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி

சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களும் கண்ணகியை கண்ணகியாக வழிபடுகிறார்கள். அதற்கு சான்று வற்றாபளை, கண்ணகை அம்மன், மற்றும் எனது பதிவில் சொன்ன கண்ணகி ஆலயங்கள். சுமதி ரூபனுக்கு அதை பற்றி போதிய அறிமுகம் இல்லாமல் இருக்கலாம்.


வித்தியாசமான ஒரு அனுபவத்தை நுகர்ந்திருக்கிறீர்கள்.

அதை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

தமிழ்நதி said...

நல்ல பகிர்வு சிநேகிதி. இப்படியான விடயங்களை விட்டுவிட்டு வந்ததுதான் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. மற்றது தெரிஞ்ச பெயர்களை வாசிக்கிறதாலை பதிவோட ஒரு நெருக்கம் இருந்தது. உண்மைதான் சத்யாவின் நடிப்பை நானும் பார்த்து வியந்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்தின் வழியாக என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தீர்கள் நன்றி.

நளாயினி said...

ஆறுதலாக ஆசவாசமாக பிறகு எழுதிறன். இங்கையும் பல நாடகங்கள் பாத்திருக்கிறன். இப்பிடிஅணுவணுவா அனுபவிச்சது கிடையாது. எதுக்கும் இந்த எமோசன் போகவிட்டு ஆறுதலா விலா வாரியா எழுதிறன். இந்த முறை இயல் விருது பெறுகிறார் ஏ.சீ தாசிசியர்.அவர் பற்றி நான் பெரிதாக அறிந்தது கிடையாது. இவற்றை அவரும் அறியும்படிசெய்யுங்கள். ஆனாலும் அவருள் வளர்ந்தவர்களை நான் அpறவேன். ஆனாலும் யாரையும் யாரும் இப்படி விமர்சித்தது கிடையாது. தங்களுக்குள் ஒரு குறுகிய வட்டத்தைப்போட்டு அவர்கள் வளர்கிறார்கள் தேடல்கள் இன்றி. மற்றய குழந்தைகளை வளற்காமல். ஆனாலும் குழந்தைகள் தாமே விழுந்தெழும்பி அதிதீவிரமா முன்னேறியிருப்பது புரிகிறது.ஆதே போல் நாமும் இருந்து விடுவது அழகல்ல. இவர்களுக்கு இவை பற்றி இடித்தரைத்து வளற்தெடுக்க வேண்டிய கடமைப்பாட்டை உணர்த்த வேண்டியவர்களாக இருக்கிறோம். இவை பற்றி அறிவிப்பீர்கள் என நம்புகிறேன்.


சுமதி ரூபனுக்கும் அவர் சார்ந்த படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள்.


http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=562&Itemid=60

சினேகிதி said...

விஜே அவாக்கு தெரியாமல் இருந்திருக்காது ..எதுக்கும் கேட்டுப்பார்ப்பம்.

\\இப்படியான விடயங்களை விட்டுவிட்டு வந்ததுதான் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது\\

உங்களை யாரு அங்க போய் இவ்வளவு நாள் நிக்கச்சொன்னது:-)))

நளாயினி அக்கா நீங்கள் சொல்ற விடயம் எனக்கு வடிவா விளங்கேல்ல :-(((
திரும்ப வருவீங்க தானே.

கானா பிரபா said...

நல்லதொரு தொகுப்பு, தொடர்ந்தும் இப்படியான விடயங்களைத் தாருங்கள். கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

செல்லி said...

நல்ல பகிர்வு, சிநேகிதி.
நல்ல நாடகம் போலிருக்கிறதே! இங்கெல்லாம் இப்படியான வாய்ப்புகள் நமக்கில்லை.கவலைதான். குடுப்பனவு அவ்வளாவுதான்!
நன்றி

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி சினேகிதி.
.......
முதலாவது நாடகம் முடியும் கட்டத்தில் 'வழமைபோல நேரத்திற்கு' வந்திருந்தேன். தர்சினியினதும் ரெஜியினதும் நடனத்தையாவது பார்க்கமுடிந்தது என்பதில் ஒரு திருப்தி.
.......
அடுத்தாண்டு நிகழ்வில் சிநேகிதியையும் மேடையில் பார்க்கலாம் என்று நம்புகின்றேன் :-).

வெற்றி said...

Oops... அணங்கு, தோற்றமயக்கம் எண்ட சொல்லுகளைப் பாத்துவிட்டு ஏதோ இலக்கியக் கட்டுரையாக்கும் எண்டு உள்ளுக்கு வந்திட்டேன்... :))

நாடகங்களை வீடியோவிலை எடுத்துப் போட்டிருக்கலாமே! நாங்களும் உங்கட புண்ணியத்திலை பாத்திருப்போம்.:))

ஆட்சேபனை இல்லையெனின் ஒரு கேள்வி.
சினேகிதியா அல்லது சிநேகிதியா?
எப்படி எழுதிறது சரி?

சினேகிதி said...

பிரபாண்ணா செல்லி என்ன இப்பிடி சொல்றா?? அங்க நாடக விழாக்கள் நடக்கிறேல்லயோ?

இல்லாட்டி செல்லி இருக்கிற இடத்திலதான் அப்பிடியோ?

லொள் டிஜே நீர் லேற்றா வந்து மிச்சத்துக்கு செல்போன்ல எதையோ தேடிக்கொண்டிருந்தீர் போல:-))) கடைசி வரியை வடிவா வாசியும்:-)))

சினேகிதி said...

வீடியோ எடுத்துப்போடவா?? நான் போறதே கடைசp நேர முடிவு.அடுத்த முறை பார்ப்பம்.

\\ஆட்சேபனை இல்லையெனின் ஒரு கேள்வி.
சினேகிதியா அல்லது சிநேகிதியா?
எப்படி எழுதிறது சரி?
\\

எனக்கும் தெரியா வெற்றி:-)) எது சரியென்று நீங்கள் நினைக்கிறீங்கிள்?

செல்லி said...

சிநேகிதி

பிரபா சிட்னில இருக்கிறார்
செல்லி பிறிஸ்பேனில இருக்கிறன்.சிட்னிக்கும் பிறிஸ்பேனுக்கும் ஆயிரம் கிலோ மீற்றர் தூரமல்லோ!

சினேகிதி said...

அப்பிடித்தான் நானும் நினைத்தேன் செல்லி....நானும் ரொரன்ரோவுக்குப் போனால்தான் இப்படியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும்.

கானா பிரபா said...

பிறிஸ்பேனில் இருந்தால் என்ன சிட்னியில் இருந்தால் என்ன, நடந்தால் தானே போகமுடியும். வருஷத்தில் ஒரு முறை இலக்கியப் பவர் என்ற அமைப்பு மட்டும் இப்படி ஏதாவது நடத்தும்.

இப்பதிவுக்கு கில்லியில் பரிந்துரைத்திருக்கிறேன்.

செல்லி said...

அப்போ, சிட்னியிலேயும் நாடகம் போடுறாதில்லையா?:-(
சிட்னிவாழ் தமிழ்மக்களை நான் என்னமோ பெரிசா நினைச்சிட்டேனோ?:-)), அதாவது நல்ல கலைக் கூட்டத்தினர் என்று.

சினேகிதி said...

Shreya mam vanthal solluva micham :-))) Prabanna ilakiya power a?? apidia pear vachirukinam?

கானா பிரபா said...

ஏன் அப்பிடி பேர் வச்சவை என்று அவைக்கே தெரியாமல் இருக்கலாம்

சினேகிதி said...

haha prabanna:-)))))))

பாரதி தம்பி said...

//இப்படியான நாடக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற சுமதி ரூபனின் ஆதங்கத்தை இனிவரும் நிகழ்வுகளில் ஆண்கள் தீர்த்து வைப்பீர்கள் தானே:-)//

ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு தீர்த்துவைக்க முயன்றிருக்கிறேன்..

http://nadaivandi.blogspot.com/2007/03/blog-post_22.html

நன்றி..

சினேகிதி said...

வாங்க ஆழியூரான்....நான் சுமதி ரூபனுடைய கருத்தைச் சரியாக சொல்லவில்லைப்போலுள்ளது..
அவர் ஆண்கள் நடிப்பில் இப்படியான மேடை நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்றுதான் சொன்னார்.பார்வையாளர்களாகப் பல ஆண்கள் வந்திருந்தார்கள்.

விரிவான பின்னூட்டம் உங்கள் பதிவிலிட்டுள்ளேன்.