Custom Search

Wednesday, July 29, 2009

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக ("Honor killing ") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார்.

தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு "தமிழ் இளைஞர் கொலை " அல்லது "ஆப்கான் பெண்கள் கொலை" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று.

அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் சொல்ல முடியவில்லை ஆனால் உதாரணத்துக்கு பிள்ளை கக்கா இருந்ததும் அம்மா இல்லாத நேரம் அப்பா கழுவி விடுவது சாதாரணமாகத்தான் எனக்குப் படுகிறது ஆனால் அது அசாதாரணமாக மற்றவர்களால் பார்க்கப்படலாம். இப்படி பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுச் சட்ட திட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது தண்டனைக்கு மிக அருகில் போய் மனவுளைச்சல் பட்டவர்கள் உள்ளார்கள். உண்மையில் இதுக்கெல்லாம் என்ன காரணம்? யார் தப்பு?

மற்றது Dating Violence பற்றியது : தமிழ் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கொடுமைப்படுத்துகிறார்களாம். எல்லாச் சட்டமும் ஆய்வுகளும் பெண்களுக்கே உதவி செய்யுது. ஆண்களைப் பற்றிக் கவனிக்க ஒருதருமில்லை என்றும் சொல்லலாம்தான். எங்காவது ஒரு சில இடங்களில் நடப்பதை வைச்சுக்கொணடு ஒரு முடிவுக்கும் வரேலாது ஆனால் பல தசாப்த காலமாக யுத்த தேசத்திலிருந்து வந்த இந்தச் சந்ததிக்கும் இங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் dating violence க்கும் தொடர்பிருக்கா என்ற ரீதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதாவது ஒரு காரசாரமான சண்டையில் காதலியைக் கை நீட்டி அடிப்பது, பெருந்தெருவில் இறக்கி விட்டுவிட்டு வருவது, உடலுறவுக்குச் சம்மதிக்காதபோது வார்த்தைகளால் நோகடிப்பது, வேறு பெண்களைக் கூட்டிக்கொண்டு வந்து நீ உடலுறவுக்குச் சம்மதிக்காட்டால் நானிப்படித்தான் செய்வன் என்பது இன்ற இந்தப்பட்டியல் நீள்கிறது.

இங்கு நான் எழுதியது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய அனுபவங்கள் என்ன?

Monday, July 20, 2009

படங்கள் NYMH











கனடாவுக்கு 5 வருடத்துக்குள் வந்த இளையவர்களைப் பற்றித்தெரிந்துகொள்ளும் நோக்கில் University of Toronto வும் Access Alliance Multicultural Health and Community Services ம் சேர்ந்து நடத்திய Sri Lanka , Columbia , Afghanistan & Sudan ஆகிய நான்கு இடங்களிலிரிந்தும் புலம்பெயர்ந்து ரொரன்டோவில் வசிக்கும் இளையோர்கள் பற்றி ஆய்வின் முடிவில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் படக்கண்காட்சியும் இடம் பெற்றது. அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள்.

முதல் 4ம் நான் எடுத்தது. 5வது கூட்டாளி எடுத்த படம்.

நீ எப்பிடி இருக்கிறாய்?

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை.


Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம்


மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்? எத்தின நாள் அழுதனாங்கள்? யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சாக்காலத்தில யார் யார் செத்தது யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும் அவ்வளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச்செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலி்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்துசேரேல்ல. ஒரு கட்டத்தில நேரில் அவர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா? கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம்.

அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு.

வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல.

retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில " குத்தப்போறான் படுங்கோ " என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல.

சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா? மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல "NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது.

எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you? என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ :

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது...
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது...

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது...
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது!



மிச்சம் அடுத்த கிழமை:)

அடுத்த கிழமை என்ன எழுதப்போறன் எண்டு தெரியாது ஆனால் ஏதும் எழுதணும் என்டு மட்டும் தெரியுது.