Custom Search

Saturday, July 02, 2005

"Mr.Temple come to me"

-சினேகிதி-

நக்கீரனின் புலம்பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா?இல்லை என்ற ஆக்கத்தை வாசித்தவுடன் இப்படி எழுதிவிட்டேன்.

தமிழின் தேவை சிறிதாக இருக்கலாம் ஆனால் தமிழ் ஒரு தொடர்பாடல் சாதனமாக மட்டுமன்றி எமது இனத்தின் அடையாளமாகவும் கணிக்கப்படுவது.

அரசியல் சமூக ஊடக சக்திகள் யாவும் தாய் மொழிக்கல்வியின் பயனைத்தான் கூறி நிற்கின்றனவே தவிர யாரும் எங்களைக் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.

எம்மைப்போன்ற மாணவர்களுக்கு அதுவும் கனடா போன்ற பல்கலாச்சார நாடுகளில் படிப்பவர்களுக்கு தாய்மொழி கதைக்கவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாகிறது – ஏனென்றால் எங்கள் பாடசாலைகளில் பல்கலாச்சார நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடைபெறும்போது ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழயைப் பிரதிபலிக்கும் ஆக்கங்களைச் செய்ய வேண்டும்.அவ்வகையில் நாங்கள் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிளை செய்யும்போது ஆங்கிலப் பாடலுக்கா ஆடுவது??அவர்கள் பாடலுக்கோ நடனத்துக்கோ அர்த்தம் அதன் கருவைப் பற்றிக் கேட்டால் எங்களுக்குச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.அப்படித் தெரிந்திருக்க வேண்டுமானால் எங்களுக்கு அதை விளங்கிக் கொள்ளக்கூடிய போதியளவு தமிழறிவு இருந்தால்தான் அதை மற்ற நாட்டவருக்கு அவர்களுடைய மொழியில் எங்களால் விளக்கம் கொடுக்க முடியும்.இப்படி தங்கள் மொழியைத் தெரிந்து கொண்டிராத பல்லகழைக்கழக மாணவர்கள் மற்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் புலமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழ் தங்கள் பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பெற்றோர் எல்லோருமே தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதில்லை..ஆங்கிலம் மூலம் தமிழ் கற்கக்கூடிய நூல்களையோ அல்லது குறுந்தட்டுக்களையோ வாங்கிக் கொடுக்கலாம்.பணம் செலவழிக்க முடியாதவர்கNளூ அல்லது விரும்பாதவர்களோ மூன்று டொலர்களுக்கு குறுவட்டுப் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் தெரிந்தவர்களுடன் கதைப்பதற்குக்கூட வாசிப்பு அவசியம் என்பது எனது கருத்து.ஒரு மொழியைப்பற்றிய அடிப்படை தெரியாமல் கேள்விஞானம் மட்டுமே கொண்ட இருவரால் எவ்வளவு நேரம் ஒரு மொழியில் உரையாடலாம் என்பது எனக்குப் புரியவில்லை.

சங்கீதம் பரதநாட்டியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில்தான் சொல்லித்தருவார்கள் தமிழில் எழுதத் தெரியாத மாணவர்கள்தான் தமிழை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதுவார்கள்.உதாரணமாக கனடாவில் நடக்கும் ஒரு பரதநாட்டிய ஆரம்ப வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒற்றைக்கை முத்திரை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைப்போம்.மயூரம் என்பது ஒரு ஒற்றைக்கை முத்திரை அதை ஆசிரியர் மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார் எனக்குத் தெரிந்து மயிலுக்குத்தான் ஆங்கில வார்த்தை உண்டு மயூரத்துக்கு இல்லை.

மற்றது திரைப்படங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் வருகிறது சரி ஆனால் இந்த உதாரணத்தைப் பாருங்கள் “திருக்கோயிலே ஓடிவா” என்றொரு தமிழப் பாடல் வரி அதற்கு ஆங்கில மொழபெயர்ப்பு பின்வருமாறு போடப்பட்டுள்ளது – “Temple is coming”. நல்ல காலம் “Mr.Temple come to me” என்று போடாமல் விட்டார்கள்.

நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியவில்லை.தமிழ் என்பது ஒரு சிறந்த மொழி என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் அது எங்கள் இன அடையாளமாக இருக்கின்றது எனவே தமிழை தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

10 comments:

ஜெயச்சந்திரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜெயச்சந்திரன் said...

சினேகிதி நீங்க எழுதினது சரி தான் . நம்மை அடையாளப்படுத்த நமது மொழி அவசியம் என்பது என் கருத்து. ஆனால் உதாரணத்துக்கு உங்களுடைய சந்ததி அதாவது உங்க பிள்ளைகள் காலத்திலும் உங்களுக்கு இருக்கும் அதே தேவை தேடல் இருக்குமா என்பது தான் சிந்தனைக்குரியது.
(இது உங்கள் பதிவோடு சம்பந்தமிலாதது.....கதை பேசும் கண்கள் அழகு.)

சினேகிதி said...

குமிழி எங்கள் பிள்ளைகளுக்கும் அந்தத் தேடல் இருக்கும் ஏனென்றால் என்னையும் என் சகோதரிகளையும் ஊக்கப்படுத்த பெற்றோர் இருந்த மாதிரி என்னாலும் என் வாரிசுகளுக்கு அந்தத் தேடலை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.அப்புறம் குமுழி என் கண்ணில கண்ணு வைக்காதீங்க அது பாவம்.

சினேகிதி said...

சக்தி நீங்கள் உங்கள் சந்ததிக்கு தாய்மொழித்தேடல் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் தமிழை ஒருபோதும் மறக்கமுடியாது சக்தி.அண்மையில் கனடிய குடிவரவாளர் ஒருவர் சொன்னார் சனத்தொகை எடுக்கும்போது அதிகமான தமிழர் உங்கள் வீட்டில் பேசும் மொழி என்ன என்று கேட்ட கேள்விக்கு ஆங்கிலம் என்று பதிலளித்திருந்தார்களாம்.இதனால் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளை நாம் இழக்கின்றோம்.என்ர பிள்ளைக்குத் தமிழ் தெரியாது என்று பெருமை பேசும் தற்குறிகள் சிலர் இருக்கிறார்கள் என்பது வேதனை.

நற்கீரன் said...

உங்களுக்கும் தமிழ் தேவை இருக்கின்றது, மகிழ்ச்சியான தகவல். உங்களின் "தமிழ்" நன்பர்கள் எத்தனை பேருக்கு அத் தேவை இருக்கின்றது. உங்களின் இளம் உறவினர் எத்தனை பேருக்கு அத் தேவை இருக்கின்றது. பலருக்கு இருந்தால், நான் பிழையாக தமிழின் தேவையை குறைவாக மதிப்பிட்டதற்காக மகிழ்ச்சியடைவேன்.

சினேகிதி said...

வாங்க எழிலன் உங்கள் பதிவுகளைக் காணவில்லை.

நற்கீரன் என் நண்பர்களுக்கும் இளம் உறவினர்களுக்கும் தமிழ்த் தேடல் இருக்கின்றது.என் இளம் சகோதரர்கள் அவர்கள் பாடசாலையில் நடைபெறும் மாலை நேர தமிழ் வகுப்புகளுக்கு செல்பவர்கள் ஆர்வமாகக் கற்கிறார்கள்.

cholai said...

சினேகிதி..அந்த "Mr. temple" - subtitle எடுத்துக்காட்டு அருமை! கலக்கல் !! நீங்கள் சொல்ல வந்ததை மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள்..!

சினேகிதி said...

மன்னிக்கணும் தோழா(ழி)
நான் யாரையும் குற்றம் சொல்வதற்காக அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

சினேகிதி said...
This comment has been removed by a blog administrator.
சினேகிதி said...

அப்படின்றீங்க அப்பாவி