Custom Search

Wednesday, December 03, 2008

வெள்ளம் + ஞாபகங்கள் + இடப்பெயர்வு



ஊரில இருந்து ஒரு போன் வந்தது. உங்கட வீடு வரைக்கும் வெள்ளம் வந்திட்டுதாம். மாயக்கக் குளம் மேவிப்பாயுதாம். நிறையப்பேர் வீட்டை விட்டுப் போய் சொந்தக்கார வீடுகளில இருக்கினமாம். எனக்குத்தெரிஞ்சு மாயக்கை குளம் ஒருநாளும் கட்டுடைத்துப் பாய்ந்ததில்லை. எங்கட வீடுதான் கடைசி வீடு. வீட்டுக்குப் பின்னால நீட்டுக்குத் தோட்டங்கள். தோட்டக்காணிகள் முடிய ஒரு சின்ன வெளி வெளிக்கு அங்காலதான் இந்தக்குளம். குளப்பக்கம் 2 தரம் போயிருக்கிறன். ஒருக்கால் மருதனார் அண்ணா வந்திருந்தநேரம் போயிருந்தம் எல்லாரும் நடந்து. இன்னொருமுறை கோயிலுக்குப் போயிருந்த நேரம் அப்பிடி அந்தக்குளத்தில என்னதான் இருக்கெண்டு பார்ப்பதற்காக களவாப்போனான். சுத்தவர பாதுகாப்பாக வேலி போல எதுவும் இல்லாததால் சின்னப்பிள்ளைகளை அந்தப்பக்கம் போக விடுவதில்லை. அப்பிடியே நாங்கள் போக முயற்சித்தாலும் தோட்டம் செய்யிற பெரிசுகள் வீட்டில போய் சொல்லிப்போடுங்கள்.

மழைக்காலத்தில வீட்டுக்கு மேல ஏறிநிண்டு பார்த்தால் வழமைக்கு மாறா கடற்கரை போல மாயக்கைத் தண்ணியும் மினு மினு என்று தெரியும். மற்ற நேரங்களில அவ்வளவு தூரத்துக்குத் தெரியாது தண்ணி. மெயின் றோட்ல இருக்கிற பாலத்தால நல்ல force ஆ வாற மழை வெள்ளம் எங்கட வீட்டடியில slow ஆத்தான் போகோணும் ஏனென்டால் எங்கட வீட்டடில ஒரு திருப்பம் ' ட ' வடிவில இருக்கு. நல்ல மழை பெய்து எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எங்கட கேற்றைத்தாண்டி தெருவெள்ளம் வீட்டுக்குள்ள வாறதில்லை. ஆனால் ஒருமுறை அப்பிடி வந்திருக்கு. எத்தினையாம் ஆண்டு என்டு தெரியாது. எங்கட வீட்டுக்கும் ஒரு பாலம் ((?) சீமேந்தால ஏற்றமா கட்டினதொண்டு) இருக்கு. வெள்ளம் அந்தப்பாலத்தை மேவி ஒரேஒரு தரம் முற்றத்துக்கு வந்திருக்கு. எனக்கு இப்பவும் ஞாபகமிருக்கு வீட்டு வாசல்ல நிண்டுகொண்டு வெள்ளம் நிரம்பி கொஞ்சம் கொஞ்சமா முற்றத்துக்கு வடிஞ்ச வடிஞ்சு வரத்தொடங்கவே நான் கத்தத் தொடங்கிட்டன் வீட்டுக்க வெள்ளம் வருது வீட்டுக்க வெள்ளம் வருதெண்டு. கொஞ்சம் கொஞ்சமா வெள்ளம் நிறையவே வரத்தொடங்கிட்டுது. முற்றத்தில இருந்து 2 படி அதுக்குப்பிறகு ஒரு ஹ~ட்வாசல். அதுக்குப்பிறகுதான் கதவு. கதவு வரைக்கும் வெள்ளம் வரேல்ல ஆனால் முற்றமெல்லாம் தெருவெள்ளம் நிரம்பி நிண்டது. பிறகு அந்த வெள்ளமெல்லாம் வத்தினாப்பிறகு தெருவெள்ளத்தோட சேர்ந்து வந்த கஞ்சல் குப்பை குட்டி குட்டித் தடி ஒற்றைச் செருப்பு இப்படியான பொருள்கள் எல்லாம் இருக்கும் முற்றத்தில.

வெள்ளம் ஓரளவுக்கு வத்தினாப்பிறகு வீடுகளில் உள்ள என்னைப்போல சின்னாக்களத்தான் பாண் வேண்டிக்கொண்டுவர அனுப்புவினம் வீட்டில. நாங்கள் 2-3 பேர் பக்கத்துவீட்டாக்கள்
எல்லாம் சேர்ந்து ஒராளை ஒராள் பிடிச்சுக்கொண்டு போறது கடைக்கு. கடைக்குப்போய் கடையில ஆற்ற வீட்டில எந்த மரம் முறிஞ்சது போன்ற தகவல்களையும் சேர்த்து
வேண்டிக்கொண்டு போவம். வெள்ளத்தில சைக்கிள் ஓடியிருக்கிறீங்கிளா? உருட்டிக்கொண்டு போனாலும் சரி ஓடிக்கொண்டுபோனாலும் சரி சைக்கிள் றிம்ல பட்ட வெள்ளம் பள்ளிச்சீருடை எல்லாம் நல்ல வடிவா தெளிக்கும்.

வெள்ளம் முற்றாக வடிந்தபின் தெருவில் திட்டுத் திட்டாக ஊத்தையெல்லாம் கழுவப்பட்டு வெள்ளை மண் மினுங்கிக்கொண்டிருக்கும். அந்த மண்ணை அள்ளி அள்ளி முற்றத்தில
போடுறது. எல்லாற்ற வீட்டுக்கும் முன்னால ஒராள் மண்வெட்டியால நின்டு அள்ளி அள்ளி வாழில போட போட மற்றாக்கள் கொண்டுபோய் கொட்டுறது. தெருவில நீட்டுக்கு நிண்டு
ஆக்கள் கதைக்கிறது நல்ல பம்பலா இருக்கும். அந்தத் தெருவுக்குள்ள இருந்தாக்கள் விவசாயம் செய்றேல்ல. ஆனால் நான் ஏற்கனவே சொன்னமாதிரி எங்கட வீட்டுக்குப்பின்னால முழுக்க நீட்டுக்கு தோட்டக்காணிகள் தான். வேற ஊார் ஆக்களும் அங்க பயிர் நட்டிருப்பினம். எங்களுக்கு மழையால பெருசா இழப்பில்லை. ஆனால் கஸ்டப்பட்டு வெங்காயத்தை நட்ட ஆக்களுக்கு நட்ட கொஞ்ச நாளிலயே மழை கொட்டிச்சுதெண்டால் தோட்டம் செய்றாக்கள் பாவம்தானே. அவையள் நாங்கள் தெருவில நின்டு கும்மியடிக்கிறதைப் பார்த்து உங்களுக்கென்ன கொண்டாட்டம்தான் நாங்கள் இனிப்போய்ப் பார்த்தால்தான் தெரியும் பயிரின்ர நிலமை என்டிட்டுப் போவினம்.

இந்தியன் ஆமி அட்டூழியம் செய்த காலத்திலயும் எங்கட ஊர் மொத்தமா இடம் பெயராமல் சில வயசுபோன ஆக்கள் ஊரில இருந்தவையாம். 92 ல என்று நினைக்கிறன் வடமராட்சியாக்கள் எல்லாரையம் தென்மராட்சி பக்கம் போகச்சொல்லி அறிவுப்பு வந்தநேரம் அநேகமா எல்லாரும் இடம்பெயர்ந்தவை. ஆனால் இப்ப இந்த மாயக்கை குளம் நிரம்பி தோட்டங்களைத்தாண்டி ஊருக்குள்ள வந்ததால எல்லாரும் வீடுகளை விட்டிட்டு வேற எங்கயோ எல்லாம் போய் இருக்க வேண்டிய நிலமை.


வன்னியில் இந்த வெள்ளக்காட்டுக்க மக்கள் வாழும் கூடாரங்களின் படங்களைப் பார்க்கேக்க ஊறிப்போன நிலத்தில அடுப்பு மூட்டி எப்பிடித்தான் சமைச்சு சாப்பிட முடியுதோ? மேல மட்டும் கூடாரம் கீழ நிலத்தில ஒன்டுமே இல்ல. எங்க படுக்கிறது?இதெல்லாம் காணாதெண்டு கிளஸ்டர் பாம் வேற பாவிக்கிது இலங்கை இராணுவம். ஆரிட்ட போய்ச் சொல்றது.

Monday, December 01, 2008

ஊமைச்செந்நாய் - ஒரு வாசிப்பனுபவம்

கொஞ்சநாளா வேலையில்லை சரி ஏதும் புத்தகம் வாசிக்கலாம் என்று யோசிச்சன். யாற்ற புத்தகங்களை வாசிக்கிறதென்று யோசிக்கேக்கதான் "ஜெயமோகன் ஜெயகாந்தன் சேர்ந்து எழுதிய கவிதை நீ "என்ற பாட்டு வரி ஞாபகம் வந்திச்சு. அதோட இவர்களின் இருவரின் பெயரும் அடிக்கடி தமிழ்மணத்தில் பார்த்திருக்கிறேன். பெரிய எழுத்தாளர்கள் என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன் வேறெந்த தகவலும் தெரியாது. நூலகத்தில இவர்கள் இருவரின் புத்தகங்களை hold பண்ணினேன்(காசு குடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கிற அளவுக்கு வளரல இன்னும் ). 3 நாட்களிலயே இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. ஒன்று 'கோகிலா என்ன செய்துவிட்டாள்' மற்றது ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு. கோகிலா என்ன செய்துவிட்டாள் என்னால் முழுவதுமாக வாசித்து முடிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையே எனக்கு விளங்கேல்ல. ஒன்று மொழிப்பிரச்சனை. நிறைய சொற்கள் தமிழ் இல்லாத மாதிரி இருந்தது. அதும் இல்லாம சூத்திரங்கள் காளி தேவதைன்னு திரும்ப திரும்ப வரவும் எனக்கு வாசிக்கப் பிடிக்கேல்ல மூடி வைச்சிட்டன். அடுத்த முறை நூலகத்துக்குப் போனபோது ஜெயமோகனின் புத்தகங்களைத் தவிர்த்து ஜெயகாந்தனின் 'ரிசிமூலம்' , 'சமூகம் என்பது நாலுபேர்' , 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' , 'உன்னைப்போல் ஒருவன்' என்ற நான்கையும் எடுத்துக்கொண்டு வந்தன். நான்கும் வித்தியாசமான வாசிப்பனுபவங்களைத்தந்தன. முக்கியமா ரிசிமூலம், உன்னைப்போல் ஒருவன், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ஆகிய மூன்று நாவல்களும் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையும் தந்தன. 1934 (?) ம் ஆண்டிலேயே இப்படியான கதைகள் எழுதப்பட்டிருப்பதே எனக்கு ஆச்சரியம்தான். அதுவும் இந்தநாவல்களில் இழையோடியிருக்கும் உளவியல் தாக்கங்களும் எண்ணப்போக்குகளும் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றிய வாசிப்பனுவத்தை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

இன்டைக்கு இந்தப் பதிவை எழுதத் தூண்டியது நேற்று தமிழ்மணத்தில் நான் வாசித்த 'ஜெயமோகன் என்ற மா....யல்' என்ற கட்டுரைதான். கட்டுரையைப் போய் வாசித்தால் ஜெயமோகனின் 'ஊமைச்செந்நாய்' என்ற சிறுகதை ஆபாசம் நிறைந்ததாக விரசத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்ற கருத்துப்பட எழுதப்பட்டிருந்தது. என்னடா இது அந்தக் கதையைப் பற்றி ஒன்றையும் சொல்லக்காணம் எழுதினவரப் பற்றியே விமர்சனமா இருக்கென்று யோசித்தன். நான் வாசிச்ச சிறுகதையில எல்லாம் (கனக்க இல்ல 2-3 :-) ஆபாசம் எல்லாம் இருக்கலையே என்டிட்டு கூகிளாண்டவரிட்ட "ஊமைச்செந்நாய்" எனக்கும் கொஞ்சம் காட்டுங்கோவன் என்று கேட்டன். ஒருமாதிரி உயிர்மையில் பதிவு செய்து அந்த சிறுகதை(நெடுங்கதை?)யை வாசிக்கத் தொடங்கினன். வாசிக்கத்தொடங்கி கொஞ்சநேரத்திலேயே first impression is the best impression என்றது உண்மையில்லை என்று உணர்ந்தேன். ஜெயகாந்தன் நாவல்களைப் போலவே ஊமைச்செந்நாயும் எனக்கு நல்ல வாசிப்பனுவத்தையே தந்தது.

நான் வாசிச்ச அந்த விமர்சனத்தில சொல்லப்பட்டது போல இந்தக்கதையில வந்த ஓரிரு வர்ணனைகள் எனக்கு ஏனோ ஆபாசமா தெரியேல்ல. இது நான் வாசித்த ஜெயமோகனின் முதல் நெடுங்கதை என்பதால் மற்றைய நாவல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது ஆனால் இந்த நாவலில் ஆபாசம் இருப்பதாக எனக்குத்தோணேல்ல.


ஒரு வெள்ளைக்கார துரைக்கு அடிமையாக இருக்கும் ஒரு இந்தியத்தாய்க்கும் ஒரு வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ஒரு வேலைக்காரனின் கதை. ஊமைச்செந்நாய் ஊமையில்ல ஆனால் ஊமையாக்கப்பட்டிருந்தான்.துரை கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுவான். ஆனால் அவனுக்கு நன்றாக ஆங்கிலம் பேசவரும் என்பது கதையின் இடையில் தெரிய வருகிறது. அவனுடைய கண்கள் காட்டு நாயின் கண்கள் போல சிவப்பாக இருக்குமாம் அதனால் அவனுக்கு அந்தப்பெயர்.கதையில் துரை பிடிக்கும் பெரிய சுருட்டு ஒரு கரிய ஆண்குறி போலிருக்கிறது என்றொரு வர்ணனை வருகிறது. இன்னொரு இடத்தில் துரைக்காக கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வருகிறான் ஊமைச்செந்நாய். அந்தப்பெண் இரண்டு குழந்தைகளின் தாய். ஏற்கனவே துரையிடம் வந்து போனவள் என்று நினைக்கிறேன். அவளைப் பற்றிய வர்ணனையில் அவளுடைய மார்புகள் தூக்கணாங்குருவிக்கூட்டுக்கும் பிட்டங்கள் இரண்டு பலாப்பழங்களுக்கும் உவமிக்கப்படுகிறது. இவற்றைத்தான் ஆபாசம் என்றிருக்கிறார்கள். துரைக்கு அவளைப்பிடிக்கவில்லை துரத்திவிடுகிறான். காரணம் அவளிடமிருந்து துர்நாற்றம் வந்ததாம். இதை வாசித்ததும் அண்மையில் பார்த்த ஏதோ ஒரு திரைப்படத்தில் சோப் வாங்கிக் குடுத்து குளிக்கச்சொல்லிட்டு அதன்பிறகு அவளைப் படுக்கைக்கு அழைக்கும் தமிழ்நாட்டுத் துரைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள். தவிர கோலங்கள் நாடகத்தில் தொல்காப்பியனின் தாயான செல்லம்மாளோடு தொடுப்பு வைச்சால் முதலாளிக்கு நல்ல யோகம் என்று சொல்கிறார் ஒரு ஜோதிடர். அந்த முதலாளியும் அவளுடைய குடிகாரக் கணவனிடமே பணத்தாசை காட்டி அவன் மனைவியோடு தொடுப்பு வைக்க முயலும்போது அவள் முதலாளியையும் வெட்டித் தானும் வெட்டுப்பட்டு செத்துப்போகிறாள். இந்தக்காட்சியும் ஞாபகம் வந்தது. துரை அவளை அனுபவித்த பிறகு துரையிடம் அடிமையாக இருக்கும் தேமா என்ற சமையல்காரன் அவளை அடிமையாக்கி கிட்டத்தட்ட வன்புணருகிறான். துரை அவனிடம் ஒன்றும் அதைப்பற்றி கேட்கவில்லை ஆனால் ஊமைச்செந்நாயிடம் கேக்கிறான் நீ சோதியை அன்டைக்கு ஊருக்கும் கொண்டுபோய் விடும்போது அவளோடு படுத்தாயா என்று கேட்டு கோவப்படுகிறான். துரைக்கு என்ன தாழ்வுச்சிக்கலோ? ஊமைச்செந்நாயின் கண்கள் சிவப்பாக இருப்பது வெள்ளைக்காரப் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொல்லிவிட்டு நீயெப்பவாவது ஒரு வெள்ளைக்காரியுடன் படுத்தாய் என்று நான் அறிந்தால் நான் உன்னைக் கொலை செய்வேன் என்று சொல்கிறான். ஏன் இவனிடத்தில் இவ்வளவு குரூரம் என்ற என் கேள்விக்குப் கதையின் முடிவில் பதில் கிடைக்கிறது.

துரையும் செந்நாயும் யானைத்தந்த வேட்டைக்குப் போகிறார்கள். காட்டில் நல்ல அடிமையாக எல்லாம் செய்கிறான். யானை வேட்டையில் செந்நாயையே பணயமாக அனுப்பி யானையை வேட்டையாடுமளவுக்கு கொடியவன் துரை. இறுதியில் யானையும் சுடுபட்டு இறந்துபோகிறது. அந்த நேரத்தில் துரைக்கு பாம்பு கடித்துவிடுகிறது. காலால் உதைத்து எச்சிலால் துப்பி ஏறி மிரித்தெல்லாம் துரை செந்நாயை அவமானப்படுத்தியிருந்து அவன் துரையைக் காப்பாற்றுகிறான். உயிர் பிழைத்த துரை குற்றவுணர்வில் உண்மையெல்லாம் சொல்கிறான். நான் உண்மையில் கெட்டவனில்லை. எங்கட ஊரில நானும் ஒரு அடிமைதான். நல்ல குடும்பத்து வெள்ளைக்கார பெண்கள் எல்லாம் எங்களைத் திரும்பியும் பார்க்கமாட்டார்கள். அங்கே எங்களை யாரும் மதிப்பதில்லை அதனால்தான் இந்தியா போன்ற நாடுகளில் வந்து உங்களைப் போல அடிமைகளிடம் எங்கள் இயலாமைகளை மறைத்து உங்களிடம் அடிமைத்தனத்தை பரிசோதித்துப் பார்க்கிறோம் என்று சொல்கிறான். ஒரு கட்டத்தில் செந்நாயைப் பார்த்து நீ நல்லவன் என் சகோதரன் நண்பன் என்றெல்லாம் பினாத்துகிறான். இதை வாசிக்கும்போது பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் தாங்களும் ஒரு கட்டத்தில் தங்களிலும் வலிமை குறைந்தவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் என்று படித்தது ஞாபகம் வந்தது. தாமிழந்து போன்ற ஏதோ ஒரு உருவமற்ற ஒன்றை இன்னொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் திரும்ப பெறுவதாக உணர்கிறார்கள். துரையின் நிலையும் அதுதானில்லையா?

ஏழுமலை என்றொரு படம் பார்த்தேன். அர்ஜுன் சிம்ரன் கஜோலா நடித்த படம். இந்தப்படத்திலும் இந்த அடிமையையும் ஆளுபவர்களையும் பார்க்கலாம். வெளிநாட்டிலிருந்து வரும் அர்ஜுனின் அண்ணன்களும் அண்ணிகளும் சேர்ந்து அர்ஜுனையும் சிம்ரனையும் அடிமைகள் போல நடத்துவார்கள்.சிம்ரன் காதுபடவே செக்ஸ்ஐ பற்றி ஏ பி சி டி தெரியாத இவனெல்லாம் குடும்பம் நடத்தி இப்ப பிள்ளைவே பிறக்கப்போது என்ன அதிசயம் என்று கேலி பண்ணுவார்கள். அதுவரை பொறுமையாக இருந்த சிம்ரன் ஆங்கிலத்திலயே வார்த்தைகளாலேயே அவர்களைத் திருப்பியடிப்பார்.இந்தப்படத்தில எனக்குப் பிடித்த காட்சியே ஒரு அண்ணனின் மகன் சிம்ரனிடம் சொல்லுவான் அமெரிக்கால எல்லாம் வீடு கூட்றதில இருந்து வோஸ்றூம் கழுவிறதெல்லாம் அம்மாதான் செய்வா. இங்கதான் இந்தப் பந்தா எல்லாம் என்று சொல்லி சிரிப்பான். அண்ணிமாருக்கு தாங்கள் அங்க அடிமையா இருக்கிறம் இங்க சிம்ரனை கொஞ்சம் அடிமையாக்கி தங்கள் இயலாமையப் போக்கிக்கொள்கிறார்கள்.கணவரும் இந்த கழுவுற துடைக்கிற வேலையில பங்கெடுத்தால் மனைவிமார் அடிமையா நினைக்கமாட்டினம் என்றது வேற விசயம். மாமியார் மருமகள் பிரச்சனையும் இதானில்லையா :-.

ஊமைச்செந்நாயிடம் திரும்ப வருவோம். கதையின் முடிவில் ஒரு பாறையிலிருந்து நழுவி ஊமைச்செந்நாய் ஒரு பள்ளத்தாக்கில் விழப்போகிறான். துரை தன் பெல்ற்றை குடுத்து அவனைக் காப்பாத்த முயற்சி செய்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ 'நீ நரகத்துக்குப் போ' என்று சொல்லிவிட்டு பெல்ற்றை பிடிக்காமல் பள்ளத்திலிருக்கும் பசிய மரங்களை நோக்கிப் போகிறான். முடிவு எனக்கு வடிவா விளங்கேல்ல என்று நினைக்கிறன். துரை தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னிலை விளக்கமெல்லாம் குடுத்த பிறகு ஏன் ஊமைச்செந்நாய் துரையை மன்னிக்கவில்லை? நரகத்துக்போ என்று சொன்னதன் அர்த்தம் திரும்பி போக வழி தெரியாமல் அல்லது காட்டு மிருகங்களிடம் அடிபட்டு துரை செத்து நரகத்துப் போறதா? அல்லது சாகாமல் உயிரோட இருந்து ஒரு அடிமை போட்ட உயிர்பிச்சைல தான் உயிர் வாழுறன் என்ற குற்ற உணர்ச்கிதான் அந்த நரகமா?